கோவை பி.எஸ்.ஜி. மருத்துவ அறிவியல், ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் உயிரி மருத்துவக் கண்டுபிடிப்பு மையம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.ஜி. மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பி.எஸ்.ஜி. உயர் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பி.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். பி.எஸ்.ஜி. கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உயிரி மருத்துவக் கண்டுபிடிப்பு நிறுவனத்தைத் திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில், பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் டீன் டாக்டர் எஸ்.ராமலிங்கம், திட்ட ஆலோசகர் குமாரசாமி, தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் ருத்ரமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
புதிய நிறுவனம் குறித்து பேராசிரியர்கள் கூறுகையில், உலக அளவில் மருத்துவ உபகரணங்கள் தொடர்பான தொழில் அபரிமிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த 17 நிறுவனங்கள் மட்டுமே உலக அளவிலான இந்தச் சந்தையில் 50 சதவீதப் பங்களிப்பை வழங்குகின்றன.
இந்தியா தனது மருத்துவ உபகரணத் தேவையில் 70 சதவீதத்தை இறக்குமதி மூலமாகவே பெறுகிறது. இதனால் இறக்குமதியைச் சார்ந்து இருக்காமல், துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு கருவிகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்கு தொடங்கப்பட்டுள்ள உயிரி மருத்துவக் கண்டுபிடிப்பு நிறுவனம், உயிரி மருத்துவத் துறை சார்ந்த தொழில்முனைவோருக்கு அறிவியல்பூர்வமான வழிகளில் துணை நிற்கும். இந்தத் துறை தொடர்பான கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமும், நிதியுதவியும் அளிக்க உள்ள இந்நிறுவனம், மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்து பணியாற்றும் என்றனர்.