கோவை மாவட்டம், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரசவ அறுவை சிகிச்சையின்போது, இளம் பெண்ணும், சிசுவும் உயிரிழந்தனர்.
தவறான சிகிச்சை காரணமாகவே இளம் பெண்ணும், சிசுவும் உயிரிழந்ததாக் கூறி அவரது உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள வாளவாடியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ரங்கநாதன் (35). இவரது மனைவி ஜெயசித்ரா (24). கர்ப்பமாக இருந்த ஜெயசித்ரா பிரசவத்துக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 15-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், ஜெயசித்ராவுக்கு சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அதில், குழந்தை இறந்துவிட்டதாகவும், தாயைக் காப்பாற்ற வேண்டும் என்றால் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ஜெயசித்ராவின் உறவினர்களிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், சந்தேகமடைந்த உறவினர்கள் ஜெயசித்ராவை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்தனர். அப்போது, ஜெயசித்ரா உயிரிழந்து இரண்டு மணி நேரத்துக்கும் மேலானதாக தனியார் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த ஜெயசித்ராவின் உறவினர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தவறான சிகிச்சை காரணமாகவே ஜெயசித்ராவும், அவரது குழந்தையும் இறந்ததாக குற்றம்சாட்டினர்.
இத்தகவல் அறிந்து வந்த பொள்ளாச்சி கிழக்கு போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து, பொள்ளாச்சி மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.