சிறு, குறு மற்றும் நடுத்தர திறன் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் கோசிமா சார்பில், எம்.எஸ்.எம்.இ. கண்காட்சி கோவையில் டிசம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இதுகுறித்து கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் கூறியதாவது:
சிறு, குறு மற்றும் நடுத்தர திறன் மேம்பாட்டு நிறுவனம், கோயம்புத்தூர் சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியன சார்பில் பீளமேட்டில் உள்ள பத்மாவதியம்மாள் திருமண மண்டபத்தில் எம்.எஸ்.எம் கண்காட்சி நடைபெறுகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.
இந்நிலையில் கோவையில் நடைபெறும் இக்கண்காட்சி மூலம் தொழில் நிறுவனங்கள் தங்களது வணிகத்தை மேம்படுத்தவும், உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் அரசின் பொதுத் துறை நிறுவனங்கள், பெரிய தொழில் நிறுவனங்களுடன் இணைந்து சர்வதேச வணிகத்தை மேற்கொள்ள உதவும்.
மேலும் தேசிய விற்பனையாளர் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆர்டர்களை பெறவும், புதுமையான நுண்ணறிவை பெறவும் கண்காட்சி உதவும். மேலும், முக்கிய உற்பத்தியாளர்கள் மற்றும் பெரிய உற்பத்தி நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து பல்வேறு வாய்ப்புகளை பெறவும் உதவும். இக் கண்காட்சியில் 80-க்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும், 20 பொதுத் துறை நிறுவனங்களும், 10-க்கும் மேற்பட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் பங்கேற்கின்றன என்றனர்.