கோவை ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக ரயில்வே டிஐஜி தீபக் எம்.தாமோர் புதன்கிழமை ஆய்வு நடத்தினார்.
கோவை ரயில்வே காவல் நிலையத்துக்கு வந்த அவர் ரயில்வே காவல் துறையினரால் இதுவரையில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விவரங்கள், அவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளின் விவரம், நிலுவையில் உள்ள வழக்கு விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து, ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தினார்.
அப்போது அவர் அதிகாரிகளிடம் கூறியதாவது:
ரயில்நிலையத்தில் உள்ள நடைமேடையில் 72 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குற்றச் செயல்களை தடுக்க ரயில்வே நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தி கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ரயில் நிலையத்தில் குற்ற சம்பவங்கள் நடந்தால் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். ரயில்வே போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என்றார்.