கோவை, குனியமுத்தூர் பகுதியில் ரூ. 11 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக பெண் ஒருவரை மாநகர குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
கோவை, குனியமுத்தூரைச் சேர்ந்தவர் எஸ்.சுமையா. இவர் அளித்துள்ள புகார் மனு:
கோவை, குனியமுத்தூர் பகுதியில் உள்ள எனது வீட்டுக்கு அருகில் பெனாசீர் பானு (30) என்பவர் சில மாதங்களுக்கு முன்னர் குடிவந்தார். அவர், தங்க நகைத் தொழில் செய்து வருவதாகவும், ரூ. 1 லட்சம் கொடுத்தால் தினமும் ரூ. 2 ஆயிரம் வீதம் ஒரு மாதம் வரை அளிப்பதாகவும் பின்னர் முழுத் தொகையையும் இரட்டிப்பாகத் திருப்பித் தருவதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, எனது உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் இருந்து ரூ. 11 லட்சம் வாங்கி அவரிடம் கொடுத்தேன். ஆனால், சில நாள்களிலேயே பெனாசீர் பானு வீட்டைக் காலி செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். ஆகவே, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. புகாரின் பேரில் பெனாசீர் பானு மீது மோசடி வழக்குப் பதிவு செய்த குற்றப் பிரிவு போலீஸார் தலைமறைவாக இருந்த அவரை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.