ஜி.எஸ்.டி வரியால் கைவினைப் பொருள்களின் விற்பனை 20 சதவீதத்துக்குகீழ் சரிந்துள்ளதாக தென் மாநில கைவினைப் பொருள்கள் தொழிற்துறை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் பி.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தி:
தென் மாநிலங்களில் தயாரிக்கப்படும் கைவினைப் பொருள்கள் பல நூற்றாண்டு கால தொன்மையான கலாசாரத்தின் அடையாளங்களாக திகழ்ந்து வருகின்றன. கருங்கல் சிற்பங்கள், செப்பு உலோக வார்ப்பு விக்கிரகங்கள், பித்தளை மற்றும் வெங்கல வார்ப்பு சிலைகள், பித்தளை விளக்குகள், மரத்தாலான தேர்கள், வாகனங்கள், மரப்பெட்டிகள், கதவுகள், தூண்கள், ஓவியங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
கைவினைத் தொழில்கள் மூலம் கிராமப்புறங்களைச் சேர்ந்த பலர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
மேலும் கைவினைப் பொருள்களின் உற்பத்தியில் 40 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுவதால், அதன் மூலம் அந்நிய செலாவணி ஈட்டப்படுகிறது.
இந்நிலையில், ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் கைவினை உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். இதனால் கடந்த 5 மாதங்களில் 20 சதவீதத்துக்கு கீழ் விற்பனை சரிந்துள்ளது. இதே நிலை நீடித்தால் தொழிலை நடத்த முடியால நிலை ஏற்படும்.
தோல் மூலப் பொருள்கள் மீதான ஜி.எஸ்.டி. 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், பாரம்பரிய கைவினைப் பொருள்கள் மீதான ஜி.எஸ்.டி. குறைக்கப்படவில்லை. கைவினைப் பொருள்களுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரியால் பல சிறிய கைவினை உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டு ஏராளமானோர் வேலை வாய்ப்பு இழந்துள்ளனர்.
எனவே, குறைந்தபட்சமாக 5 சதவீத வரி விதிப்பு என்பது ஏற்கக் கூடியது. எனவே ஜி.எஸ்.டி. சட்டத்தில் உரிய மாறுதல் செய்து கைவினைத் தொழிலை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.