கோவையில் அடுத்தடுத்த 4 கடைகளின் பூட்டை உடைத்து ரூ. 2 லட்சம் ரொக்கம், மடிக் கணினி ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
கோவை, ராஜவீதி மாநகராட்சி வாகன நிறுத்துமிடம் உள்ள வணிக வளாகத்தில் மின் சாதனம், பரிசுப் பொருள் விற்பனையகம், பேன்சி ஸ்டோர் உள்ளிட்ட கடைகள் அமைந்துள்ளன.
இந்நிலையில், அங்குள்ள கடைகளை மூடிவிட்டு பணியாளர்கள் புதன்கிழமை இரவு சென்றுள்ளனர். பின்னர் வியாழக்கிழமை கடையை திறக்க வந்தபோது 7 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
வெரைட்டி ஹால் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது 4 கடைகளில் இருந்த ரூ. 2 லட்சம் ரொக்கம், மடிக்கணினி திருடுபோனது தெரியவந்தது. மேலும் 3 கடைகளில் பணம் இல்லாததால் பூட்டு மட்டும் உடைக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து, தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. ஆனால், அதில் துப்பு எதுவும் கிடைக்கவில்லை. மேலும் அருகில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்திய போது 3 பேர் கொண்ட கும்பல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து வெரைட்டி ஹால் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபர்களைத் தேடி வருகின்றனர்.