பாதாள சாக்கடையில் சிக்கி தொழிலாளி சாவு

கோவையில் தங்கத் துகள்களைத் தேடி பாதாள சாக்கடைக்குள் இறங்கிய தொழிலாளி அதில் சிக்கி உயிரிழந்தார்.

கோவையில் தங்கத் துகள்களைத் தேடி பாதாள சாக்கடைக்குள் இறங்கிய தொழிலாளி அதில் சிக்கி உயிரிழந்தார்.
கோவை,  டவுன்ஹால்,  இடையர் வீதி,  தாமஸ் வீதி,  சலீவன் வீதி,  பெரியகடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான நகைப் பட்டறைகள் இயங்கி வருகின்றன.  இந்தப் பட்டறைகளில் தங்க நகை செய்யும்போது கழிவுகளாகும் தங்கத் துகள்கள் சாக்கடைகளில் கலந்துவிடுவது வழக்கம்.
அவ்வாறு, சாக்கடை நீரில் கலந்துள்ள தங்கத் துகளைத் தேடி எடுக்க தொழிலாளர்கள் சிலர் சாக்கடையில் இறங்குவது வழக்கம்.  அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு அவர்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,  டவுன்ஹால் இடையர் வீதி,  தாமஸ் வீதி சந்திப்பில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறியுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சிக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து,  மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்யும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனர். அப்போது,  பாதாள சாக்கடையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் இருந்ததைப் பார்த்துள்ளனர்.
இதுகுறித்து வெரைட்டி ஹால் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் சடலத்தை மீட்டனர். அப்போது,  உயிரிழந்த நபரின் கையில் பச்சை குத்தப்பட்டு இருந்த பெயரை கொண்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில் உயிரிழந்தவர்,  கோவை,  உக்கடம் சி.எம்.சி. காலனியை சேர்ந்த அருணாசலம் (42) என்பதும்,  தங்கத் துகள்களை தேடி இடையர் வீதி சந்திப்பில் உள்ள பாதாள சாக்கடைக்குள் இறங்கியபோது அதில் சிக்கி உயிரிழந்ததும் தெரியவந்தது.  அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com