கோவை புண்யா அறக்கட்டளை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான விநாடி - வினா போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்குவதற்காக கோவையில் 2014-இல் தொடங்கப்பட்ட புண்யா அறக்கட்டளை சார்பில், தற்போது 251 மாணவ-மாணவிகள் கோவை, திருச்சி, புதுச்சேரி, சென்னை, ஹைதராபாத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயின்று வருகின்றனர்.
இவர்களுக்கு கல்விக் கட்டணம், புத்தகங்கள், சீருடைகள் போன்றவற்றை வழங்குவதுடன் அவர்களின் தனித் திறன்களை கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான முயற்சிகள், சுய முன்னேற்றப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே இந்த மாணவ-மாணவிகளின் கல்விக்காக நிதி திரட்டும் விதமாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான 4-ஆவது விநாடி வினா போட்டி கணபதி சி.எம்.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. டிரிஷ்னா 2017 என்ற பெயரில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில், ஜி.கே.டி. பள்ளியின் பிரித்திவ் விஜய் - லலித் இணையும், இரண்டாவது பரிசை அதே பள்ளியின் லிப்னி பேட்ரிக், சத்ய நாராயணன் இணையும், மூன்றாவது பரிசை பி.எஸ்.பி.பி. மில்லினியம் பள்ளியின் பிரணவ், ஆதித்யா கிரண் இணையும் பெற்றனர்.
கல்லூரி மாணவர்களுக்கான பிரிவில் சி.ஐ.டி. கல்லூரியின் சரத் சந்தர், ரூபேஷ் இணையும், இரண்டாவது பரிசை அதே கல்லூரியின் ஹரிஹரன், கிருஷ்ணா இணையும், மூன்றாவது பரிசை அமிர்த விஷ்வ வித்யா பீடம் கல்லூரியின் கோகுல்நாத், விவேக் இணையும் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஸ்ரீ ஐயப்பா கீ நிறுவனத் தலைவர் கே.கிரிசன், சி.எம்.எஸ். பள்ளி முதல்வர் ஹாஜா ஷெரீப் ஆகியோர் கோப்பை, ரொக்கப் பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சிக்கு புண்யா அறக்கட்டளையின் தலைவர் ஏ.சுஜித் தலைமை தாங்கினார்.