கோவையை அடுத்துள்ள மதுக்கரை அருகே திருமணமாகி 6 மாதங்களேஆன இளம்பெண் தீக்குளித்துத் தற்கொலைக்கு முயன்றார். அவரைக் காப்பாற்ற முயன்ற கணவர் உயிரிழந்தார்.
நாகை மாவட்டம், சீர்காழியைச் சேர்ந்தவர் தினேஷ் (26). இவரது மனைவி சரண்யா (22). இவர்களுக்குத் திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகின்றன. இந்நிலையில், கோவையை அடுத்துள்ள க.க.சாவடியில் இருவரும் தங்கி கூலி வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 3) இரவு தினேஷ் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார்.
இதைக் கண்டித்த சரண்யாவுக்கும், தினேஷுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்த சரண்யா உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரை தினேஷ் காப்பாற்ற முயன்றார். இதில், இருவரும் பலத்த காயமடைந்தனர். இருவரும் கோவை அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தினேஷ் புதன்கிழமை உயிரிழந்தார். இது குறித்து க.க.சாவடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.