கோவை ஒண்டிப்புதூரில் உள்ள மதுக் கடையை அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒண்டிப்புதூர் சிந்து நகரில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மதுக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுக் கடையால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்குப் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் பலமுறை புகார் அளித்துள்ளனர். எனினும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால், அதிருப்தி அடைந்த சிந்து நகர் மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் மதுக் கடையை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனர்.
தகவலறிந்து அங்கு சென்ற சிங்காநல்லூர் போலீஸார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.