தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வை வலியுறுத்தி நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடர்பான விளக்கக் கூட்டம் வால்பாறையில் நடைபெற்றது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ. 294.03 என கடந்த 5-ஆம் தேதி கோவையில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்நிலையில், கேரள மாநில தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்துக்கு இணையாக வால்பாறை தோட்ட த் தொழிலாளர்களுக்கு ரூ. 300-க்கு மேல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத தொழிற்சங்கங்கள் மற்றும் சில அரசியல் கட்சிகள் சார்பில் சென்னையில் அமைச்சர்கள் முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை அண்மையில் நடைபெற்றது. இதில் எந்த முடிவும் எடுக்காமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடர்பான ஆலோசனை மற்றும் விளக்கக் கூட்டம் வால்பாறை தனியார் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கேரள மாநில தோட்டத் தொழிலாளர்கள் பெறும் ரூ. 312 சம்பளம் வால்பாறை தொழிலாளர்களுக்கும் வழங்க அரசு மூலம் எஸ்டேட் நிர்வாகத்தை வலியுறுத்தி பெறுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டத்தில், பொன்கணேஷ், ஜெபராஜ், நரசப்பன் (அதிமுக), சுந்தர்ராஜன், தங்கவேல் (பாஜக), வீரமணி, கேசவமருகன் (விடுதலை சிறுத்தைகள்), பரமசிவம் (சி.ஜ.டி.யூ) உள்பட சில கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.