சிறுநீரகக் கோளாறு காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனைக் கைதி நீதிமன்ற உத்தரவுப்படி கோவை அரசு மருத்துவமனைக்கு சனிக்கிழமை மாற்றப்பட்டார்.
கோவை தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் அபுதாஹீர் (38). 1998-ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டு வெடிப்பு வழக்கில் இவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் தண்டனை முடிவடைந்த நிலையில், மதுரையில் சிறைக் காவலரைக் கொலை செய்த வழக்கில் அபுதாஹீருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
இதனிடையே, சிறுநீரகக் கோளாறு காரணமாக 2013-ஆம் ஆண்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அபுதாஹீர் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவரால் தொடர்ந்து மருத்துவக் கட்டணம் செலுத்த முடியவில்லை.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் வழக்குத் தொடர்ந்தது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அபுதாஹீர், கோவை அரசு மருத்துவமனைக்கு சனிக்கிழமை மாற்றப்பட்டதாக சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.