பெரியநாயக்கன்பாளையத்தில் நகைப் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 2 நபர்களை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனர்.
பெரியநாயக்கன்பாளையத்திலுள்ள ரங்கா நகரைச் சேர்ந்தவர் வினோ. இவர் தனது இருசக்கர வாகனத்தை வீரபாண்டி பிரிவில் வெள்ளிக்கிழமை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது வாகனத்தை காணவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீஸார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், மேட்டுப்பாளையம், பங்களா மேடு பகுதியைச் சேர்ந்த பத்மராஜ், தனது மனைவியுடன் மேட்டுப்பாளையம் சாலையில் பிரஸ் காலனி அருகே இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களைப் பின்தொடர்ந்து வந்த இருவர், பத்மராஜ் மனைவியிடம் இருந்த 2 பவுன் சங்கிலியை பறித்து செல்ல முயன்றுள்ளனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர்கள், பள்ளேபாளையம் புதூரைச் சேர்ந்த ரங்கநாதன் மகன் தினேஷ்குமார் (32), ஆனைப்பள்ளியைச் சேர்ந்த கண்ணையன் மகன் கார்த்திக் (24) என்பதும், இருவரும் வீரபாண்டி பிரிவில் இருசக்கர வாகனத்தை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார், இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.