வால்பாறை நீதிமன்றம் சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் சோலையாறு நகர் இடதுகரை பகுதியில் நடைபெற்றது.
நாட்டில் அமைந்துள்ள நீதிமன்றங்கள் மூலம் தொலைதூரங்களில் வசிக்கக்கூடிய மக்களை நேரடியாக சென்று சந்தித்து குறைகளை கேட்கும் முகாம் மாதத்தில் மூன்று முறை நடத்த வேண்டும் என்ற புதிய திட்டத்தை உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்படி வால்பாறை நீதிமன்றம் சார்பில் வால்பாறையை அடுத்த சோலையாறு நகர் இடதுகரை பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது.
வட்ட சட்டப் பணிகள் குழு உறுப்பினர் வழக்குரைஞர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் பல்வேறு பிரச்னைகள் தொடர்பான மனுக்கள் அளித்தனர். இதில் பெரும்பாலான பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட்டது. சட்டப் பணிகள் குழுத் தன்னார்வலர்கள் சுரேஷ், முனியான்டி, தாமரைக்கண்ணன் உள்பட பலர் முகாமில் பங்கேற்றனர்.