வால்பாறை நகர் பகுதியில் சேகரிக்கும் குப்பைகளை நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் சாலையோரத்தில் கொட்டிச் செல்வதால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வால்பாறை நகராட்சிக்கு உள்பட்ட நகர சாலை, கூட்டுறவு காலனி, வாழைத் தோட்டம், குமரன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் சேகரமாகும் குப்பைகளை லாரி மூலம் எடுத்து சென்று ஸ்டேன்மோர் சாலையில் உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டுவது வழக்கம்.
ஆனால், துப்புரவுப் பணியாளர்கள் சேகரமாகும் குப்பைகளை கிடங்கில் கொட்டாமல், அதன் நுழைவாயில் வெளியே உள்ள சாலையிலேயே கொட்டிவிட்டு வந்து விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, அவ்வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், சுகாதார கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் கூறுகையில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நகராட்சி அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். ஆனால், சுகாதாரக் கேட்டை விளைவிக்கும் சாலையோர குப்பைகளை அகற்றாமல் அதிகாரிகள் மெத்தனமாக இருப்பது கவலையளிக்கிறது என்றார்.