சோலையாறு நகர் தபால் நிலையத்தில் இணையதள சேவை பழுதடைந்திருப்பதால், தங்களது கணக்கில் உள்ள சம்பளத் தொகையை பெற முடியாமல் தோட்டத் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.
வால்பாறை பகுதி எஸ்டேட்களில் பணியாற்றும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பளம், வங்கி மற்றும் தபால் நிலையத்தில் தொழிலாளர் கணக்கில் நிர்வாகத்தினர் செலுத்தி வருகின்றனர். இதில் பெரும்பாலான வெளி மாநில தொழிலாளர்களின் சம்பளம் தபால் நிலையத்திலேயே செலுத்தப்படுகிறது. இத்தொகையை பெற தொழிலாளர்கள் ஒரு நாள் சம்பளத்தை இழக்க வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில், வால்பாறையை அடுத்த சோலையாறு நகரில் உள்ள தபால் நிலையத்தில் கடந்த 10 தினங்களாக இணையதள சேவை இல்லாமல் உள்ளது. இதனால் ஷேக்கல்முடி, முருகாளி உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட் நிர்வாகம், தபால் நிலையத்தில் கடந்த 7-ஆம் தேதி செலுத்திய தங்களது சம்பளத் தொகையை எடுக்க முடியாமல் தொழிலாளர்கள் கடந்த 10 தினங்களாக தவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக தபால் நிலைய அதிகாரி கூறுகையில், பி.எஸ்.என்.எல். இணையதள சேவை இப்பகுதியில் சரிவரக் கிடைப்பதில்லை. இணையதள சேவை இருந்தால் மட்டுமே தொழிலாளர்கள் தங்களது கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முடியும். எனவே, இணையதள சேவை சீரான பின் தொழிலாளர்களுக்கான ஊதியத்தை எடுத்துக் கொள்ளலாம் என்றார்.