மேட்டுப்பாளையத்தை அடுத்த வன பத்ரகாளியம்மன் கோயில் பவானி ஆற்றில் சகதிகளை அகற்றும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
மேட்டுப்பாளையத்தை அடுத்த வன பத்ரகாளியம்மன் கோயிலருகே பவானி ஆறு உள்ளது. இங்கு வரும் பக்தர்கள் வழக்கமாக இந்த ஆற்றில் குளித்து விட்டு பின்னர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள்.
இதற்காக ஆற்றோரம் கோயில் சார்பில் படித்துறையும் அமைக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் பாதுகாப்பாக குளித்து விட்டு செல்வது வழக்கம்.
ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை தினங்களில் இங்கு கூடும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆற்றில் குளித்துவிட்டு, உடுத்தி வந்த ஆடைகளையும், முன்னோர் நினைவாக பூஜைகளை செய்து இலையில் வைத்த பொருள்களையும் ஆற்றில் விட்டு செல்வார்கள். இதனால், பவானி ஆற்றோரம் சேறு, சகதிகளுடன், பக்தர்கள் விட்டுச் சென்ற துணிகளும் கழிவுகளாக நீரின் அடியில் தேங்கியிருந்தன.
இந்நிலையில், மேட்டுப்பாளையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள நீர்மின் கதவணையில் கடந்த வாரம் பழுது ஏற்பட்டதை தொடர்ந்து, அதை சரிசெய்ய கதவணை நீர் முழுவதும் திறந்து விடப்பட்டது.
இதைத் தொடர்ந்து வன பத்ரகாளியம்மன் கோயில் ஆற்றோர படித்துறையில் நீரின் அளவு குறைந்ததால் ஆற்றுப் பகுதியில் சேறு, சகதிகளுடன் பக்தர்கள் விட்டுசென்ற துணிகளும் தேங்கி கிடந்தன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து, கோயில் நிர்வாகம் சார்பில் ஆற்றோர பகுதியை சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. பொக்லைன் இயந்திரம் மூலம் ஆற்றுப் பகுதியில் இருந்த சேறு, சகதிகள், கழிவு துணிகள் ஆகியவை அகற்றப்பட்டன. மேலும், கரையோரமிருந்த முள்புதர்களும், குப்பையும் அகற்றப்பட்டன.