கோவையை அடுத்த பேரூர் அருகே சீராக குடிநீர் விநியோகம் செய்யக் கோரி அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவையை அடுத்த பேரூர் செட்டிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்டது பச்சாபாளையம் கிராமம். இந்தக் கிராமத்தில் கடந்த சில நாள்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது.
இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை வலியறுத்தியும் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை காலை 7.30 மணி அளவில் பேரூர்-சிறுவாணி சாலையில் காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த, தகவலின்படி தொண்டாமுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், பேரூர் காவல் ஆய்வாளர் மனோகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, அப்பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் குடிநீர் விநியோகிப்பதாகவும் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்துள்சென்றனர்.