கோவை காந்திபுரத்தில் மதுபோதையில் தனியார் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து போலீஸார் கூறியதாவது:
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து காரமடை நோக்கி தனியார் பேருந்து திங்கள்கிழமை இரவு 8 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. பேருந்தில் 70-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்தப் பேருந்து காந்திபுரம், கிராஸ்கட் சாலை சிக்னலில் நிற்காமல் சென்றது. அப்போது அங்கிருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் அந்தப் பேருந்தை மடக்கிப் பிடித்துள்ளார். அப்போது, பேருந்து ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
விசாரணையில், அவர் பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த டி.கிறிஸ்டோபர் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து, மோட்டார் வாகனச் சட்டப்படி அவர் மீது மதுபோதையில் வாகனம் இயக்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், தனியார் பேருந்து நிறுவனத்துக்கு அதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு, மாற்று ஓட்டுநர் வரவழைக்கப்பட்டு பேருந்து இயக்கப்பட்டது.