கோவையில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு இலவச இசை வகுப்புகள் நடத்த ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் இடையே திங்கள்கிழமை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்த நிகழ்ச்சி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக வேந்தர் பி.ஆர்.கிருஷ்ணகுமார், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குநர் எம்.கிருஷ்ணன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பல்கலைக்கழக துணைவேந்தர் பிரேமாவதி விஜயன், பதிவாளர் கெளசல்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஒப்பந்தத்தின்படி, கோவையைச் சேர்ந்த 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு 50 வாரங்களில் 100 மணி நேரம் பயிற்சி அளிக்கப்படுகிறது. "சின்னஞ்சிறு குயில்கள்' எனும் தலைப்பிலான இந்தப் பயிற்சி வகுப்பு, ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
80 சதவீத வருகைப் பதிவு உள்ள மாணவ, மாணவிகளுக்குச் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியின் இறுதியில் தேர்வு நடத்தப்படும்.
மேலும், திறமையான 5 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பாலவாணி பட்டம், சான்றிதழ் வழங்கப்படும்.