கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த ஷைனாவுக்கு உடல் நலக் குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கோவையை அடுத்த கருமத்தம்பட்டியில் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த ரூபேஷ், அவரது மனைவி ஷைனா, அனூப் மேத்யூ, வீரமணி மற்றும் கண்ணன் ஆகியோர் 2015-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த 5 பேர் மீதும் தடை செய்யப்பட்ட இயக்கத்தில் உறுப்பினராக இருத்தல், போலி ஆவணம் கொடுத்து சிம்கார்ட் வாங்கியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், மூட்டு வலியால் ஷைனா அவதிப்பட்டுள்ளார்.
அதைத்தொடர்ந்து, பரிசோதனைக்காக பலத்த பாதுகாப்புடன் திங்கள்கிழமை காலை 9.45 மணிக்கு அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர். பிற்பகல் 12.15 மணி அளவில் மீண்டும் அவர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.