பொள்ளாச்சியில் ஒரு வாரத்துக்குள் அரசுக் கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆ.கணபதி தெரிவித்தார்.
பொள்ளாச்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசுக் கலைக் கல்லூரி பொள்ளாச்சி சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் முயற்சியில் சமத்தூர் ராம ஐயங்கார்மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கப்படவுள்ளது.
இதற்கான இடத்தை அப்பள்ளி வளாகத்தில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆ. கணபதி, பதிவாளர் (பொறுப்பு) வனிதா, சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆகியோர் பார்வையிட்டனர்.
இதைத் தொடர்ந்து, பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆ.கணபதி கூறியதாவது:
பொள்ளாச்சி சுற்றுப் பகுதி மக்களின் நலனுக்காக பாரதியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரி பொள்ளாச்சியில் திறக்க முடிவு செய்துள்ளோம். சமத்தூர் ராம ஐயங்கார் பள்ளியில் 5 வகுப்புகளுடன் கல்லூரி தொடங்கப்படவுள்ளது. அதற்குப் பிறகு நிரந்தரமான இடம் கிடைத்தவுடன் கல்லூரி விரிவுபடுத்தப்படும். தொடக்கத்தில் இளங்கலை தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், கணிதம், பிகாம் சி.ஏ. ஆகிய வகுப்புகள் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். ஒரு வாரத்துக்குள் இந்த ஆண்டுக்கான சேர்க்கை நடைபெறும் என்றார்.
வால்பாறை சட்டப் பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு, சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் முத்துகருப்பண்ணசாமி, நகர்மன்ற முன்னாள் தலைவர் கிருஷ்ணகுமார், வட்டாட்சியர் செல்வி ஆகியோர் உடனிருந்தனர்.