கோவை கங்கா மருத்துவமனையில் ஜூன் 29-ஆம் தேதி முதல் ஜூலை 2-ஆம் தேதி வரையில் மகப்பேறு தொடர்பான சர்வதேச கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
இதில், மருத்துவர்களுக்கு பிரசவ நேரத்தில் ஏற்படும் குழப்பங்கள் மற்றும் இயல்பாக கையாளுதல் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
இது குறித்து கங்கா குழந்தைகள் மற்றும் பெண்கள் மகப்பேறு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் சுமா நடராஜன் கூறியதாவது:
மகப்பேறு சிகிச்சையில் தற்போது பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் இடம்பெற்று இருந்தாலும், அனுபவம் பெற்ற மகப்பேறு மருத்துவர்களுக்கு, சிகிச்சை அளிக்கும்போது சரியான முடிவு எடுப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
இயற்கை மகப்பேறு என்பது இயல்பான நிகழ்வாக இருந்தாலும், சில சூழ்நிலைகளில் மகப்பேறு மருத்துவத்தில் சிக்கல் ஏற்பட்டு தாய் மற்றும் குழந்தைகளுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இக்கருத்தரங்கில் அனுபவமிக்க உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் உள்ள மகப்பேறு மருத்துவர்கள் பங்கேற்று தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். இதன் மூலம் மகப்பேறு பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள் பயனடைய முடியும்.
இக்கருத்தரங்கின் முதல் இரண்டு நாள்கள் மகப்பேறு மருத்துவ சிகிச்சை முறை, பிரசவ காலத்தில் ஏற்படும் பிரச்னைகள், அதற்கான தீர்வுகள், மிகவும் சிக்கலான மகப்பேறு சிகிச்சை குறித்து பணிப் பட்டறை ஆகியவை நடைபெறும் என்றார்.