வங்கி மற்றும் தபால் நிலையத்தில் செலுத்தப்படும் தங்களின் சம்பளத் தொகையை எடுப்பதற்கு சிரமப்படுவதாகத் தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வால்பாறை வட்டாரத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்களுக்கான சம்பளத்தை, அவர்களின் வங்கிக் கணக்கிலோ அல்லது அஞ்சலகக் கணக்கிலோ எஸ்டேட் நிர்வாகத்தால் செலுத்தப்பட்டு வருகிறது.
சம்பளத்தைப் பெறுவதற்காக தொழிலாளர்கள் வங்கிக்குச் சென்று காத்திருப்பதால், வேலைக்கு செல்ல இயலாமல், அன்றைய ஒருநாள் கூலியை இழக்க நேரிடுகிறது. தொழிலாளர்களின் சம்பளத்தை, அஞ்சலகக் கணக்கில் செலுத்தும் எஸ்டேட் நிர்வாகங்கள் கொடுக்கும் மொத்த சம்பளத் தொகைக்கான காசோலையால், ஒருவார கால அவகாசத்துக்குப் பிறகுதான் தொழிலாளர்கள் சம்பளத்தை ரொக்கமாகப் பெற முடிகிறது. இந்த நிலையைப்போக்க, தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை ரொக்கமாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இத்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.