பெரியநாயக்கன்பாளையத்தையடுத்த கவுண்டம்பாளையத்தில், பேருந்து நிறுத்தத்தில் செயல்பட்டு வந்த மதுக் கடை, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வேறு இடத்துக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவிவித்துள்ளனர்.
பெரியநாயக்கன்பாளையத்திலிருந்து கோவனூர் செல்லும் சாலையில் கவுண்டம்பாளையத்தில் விஜயலட்சுமி நகர் அருகே மதுக் கடை செயல்பட்டு வந்தது. பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் ஏற்கெனவே மூடப்பட்ட நிலையில், இந்த மதுக் கடைக்கு தினமும் மது அருந்த வருவோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் காணப்பட்டது.
இதனால், அப்பகுதி பொது மக்களுக்கு இடையூறு ஏற்பட்டது. இந்த மதுக் கடையை வேறு இடத்துக்கு இடம் மாற்றம் செய்ய வேண்டும் என அனைத்துக் கட்சியினர், பொதுமக்கள்
போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள், மதுக் கடையை வேறு இடத்துக்கு இடம் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்திருந்தனர்.
அதன்படி, இந்த மதுக் கடை இங்கிருந்து அகற்றப்பட்டு, கவுண்டம்பாளையத்திலிருந்து பாரதி நகர் செல்லும் சாலையில் உள்ள சுடுகாடு அருகே அமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக, அப்பகுதி மக்கள், டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளுக்கு பாராட்டுத் தெரிவிக்கும் வகையில் விளம்பரப் பலகை வைத்துள்ளனர்.