கோவை, வெள்ளலூர் அருகே 14 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணம் புதன்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டது. இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது:
வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு வியாழக்கிழமை திருமணம் நடைபெறுவதாக போத்தனூர் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின்படி, அங்கு சென்ற காவல் துறையினர் சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து குழந்தைகள் நல அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்தச் சிறுமியையும், பெற்றோரையும் ஆலோசனைக்காக கோவையில் உள்ள காப்பகத்துக்கு அழைத்துச் சென்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.