தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (மே 19) வெளியாக உள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை, கோவை மாவட்டத்தில் உள்ள நூலகங்களில் மாணவர்கள் இலவசமாகத் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவையில் சுமார் 42 ஆயிரம் மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதியுள்ளனர். இந்தத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வெளியாக உள்ளன. இந்நிலையில், பொதுத் தேர்வு முடிவுகளை அனைத்து மாணவ, மாணவிகளும் இலவசமாகத் தெரிந்து கொள்ள நூலக ஆணைக் குழு ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, மாவட்ட மைய நூலகம், வட்டாரத் தலைமை நூலகங்களில் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை இலவசமாகப் பார்த்து தெரிந்து கொள்வதுடன், மதிப்பெண்களை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட நூலக அலுவலர் (பொறுப்பு) ஜெ.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இதற்காக வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நூலகங்களில் உள்ள கணினிகள் மாணவர்களுக்காகவே பயன்படுத்தப்படும் என்றும் மாணவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.