மாநில நெடுஞ்சாலைப் பராமரிப்புப் பணிகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் தமிழக அரசின் கொள்கை முடிவைக் கண்டித்து சாலைப் பணியாளர்கள் தலையில் முக்காடுபோட்டு, ஒப்பாரிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை, திருச்சி சாலையில் உள்ள நெடுஞ்சாலைத் துறைக் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பாக சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் கோவை கோட்டத் தலைவர் ஆர்.வெள்ளிங்கிரி, பொள்ளாச்சி கோட்டத் தலைவர் சின்னமாரிமுத்து, நீலகிரி கோட்டத் தலைவர் மோகன்ராஜ், கோபி கோட்டத் தலைவர் கருப்பசாமி ஆகியோர் தலைமையில் சாலைப் பணியாளர்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தைப் பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். பணி நீக்க காலத்தில், இறந்துபோன சாலைப் பணியாளர்களின் வாரிசுகளுக்குப் பணி வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கு மாதாந்திர ஊதியம் வழங்கும் தற்போதைய முறையை கைவிட்டு, நிரந்தர ஊதிய தொகுப்பில் இருந்து ஊதியம் வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கு சாலை ஆய்வாளர் பணி உயர்வு வழங்க வேண்டும். நெடுஞ்சாலைப் பராமரிப்புப் பணியை தனியாரிடம் வழங்கும் கொள்கை முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஆர்.நஜாம், அரசு ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்டச் செயலாளர் எஸ்.குமார், மாவட்டப் பொருளாளர் ரங்கராஜன், தெற்கு வட்டக் கிளைத் தலைவர் ராஜகோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.