உக்கடம் குளத்தில் கல்லூரி மாணவர் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, காவல் துறையினர் கூறியதாவது:
கோவை, செல்வபுரம் முத்துசாமி காலனியைச் சேர்ந்தவர் செல்வராஜ். ஜவுளிக் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் எஸ்.தனுஷ்குமார் (19). இவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், வீட்டில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வெளியே சென்ற தனுஷ்குமார் உக்கடம் பெரிய குளத்தில் திங்கள்கிழமை சடலமாக மிதந்துள்ளார்.
இதுகுறித்த தகவலின்பேரில் பெரியகடைவீதி காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று தனுஷ்குமாரின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். அதில் அவர், எனக்கு இந்த உலகில் வாழப்பிடிக்கவில்லை என்று வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.