சூலூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தமிழக அரசின் விலையில்லா பாடப் புத்தகங்கள் வெள்ளிக்கிழமை இரவு கொண்டு வரப்பட்டன.
சூலூரில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இங்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு இந்த ஆண்டுக்கான அரசின் விலையில்லா பாடப் புத்தகங்கள் வெள்ளிக்கிழமை இரவு கொண்டு வரப்பட்டன. இதில், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதை இரவு நேரத்தில் கொண்டு வந்ததால் அவற்றைப் பெற்றுக்கொள்ள ஆசிரியர்களோ, தலைமை ஆசிரியரோ அங்கு இல்லை.
சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியில் இருந்த இரவுக் காவலர் ஆறுமுகம் அவற்றைப் பெற்றுக் கொண்டு தலைமையாசிரியருக்குத் தகவல் தெரிவித்தார்.
இவ்வாறு இரவு நேரங்களில் பாடப் புத்தகங்களை பள்ளிகளில் வழங்குவதால் பெண் தலைமை ஆசிரியர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
பாடப் புத்தகங்களை பகல் நேரத்தில் வழங்கினால் அவற்றின் எண்ணிக்கை, தரம் உள்ளிட்டவற்றைப் பரிசோதித்து வாங்கமுடியும். இரவில் கொண்டுவந்து பள்ளியின் ஒரு அறையில் வைத்துவிட்டுச் செல்வதால் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அது தெரியவராமல், அதனைப் பெறும் மாணவர்களும் சிரமத்துக்கு ஆளாக நேரிடும்.
எனவே, அரசின் விலையில்லாப் பாடப் புத்தகங்களை பள்ளிகளில் பகல் நேரங்களில் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை
மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.