கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் காரமடையில் மனைவியைக் கொலை செய்த வழக்கில் கூலித் தொழிலாளிக்கு கோவை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்ளித்துள்ளது.
கோவையை அடுத்த காரமடை, காமராஜ் நகரைச் சேர்ந்தவர் வி.மோகன் (33). கூலித் தொழிலாளி. இவருக்கும் அதேபகுதியைச் சேர்ந்த வனிதாவுக்கு (27) கடந்த 2008-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மனைவியின் நடவடிக்கையில் சந்தேகப்பட்டு மோகன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், 2011 ஆகஸ்ட் 10-ஆம் தேதி வனிதா உடல் கருகிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் அளித்த வாக்குமூலத்தில் கணவர் சந்தேகப்பட்டதால் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றியதாகவும், அப்போது மோகன் தீயை பற்றவைத்து கீழே போட்டதால் விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். பின்னர் அவர் அதே ஆண்டு செப்டம்பர் 26-ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்த வழக்கு கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் மீதான இறுதிக் கட்ட விசாரணை நிறைவடைந்து, நீதிபதி ஏ.மணிமொழி வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கினார்.
அதில், மனைவியைக் கொடுமைப்படுத்தியதற்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 2 ஆயிரமும், உயிரிழப்பை ஏற்படுத்தியதற்காக 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரமும் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், இந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.