தமிழகத்தில் நடைபெற்று வரும் வருமானவரித் துறையினரின் சோதனை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே நடைபெறுவதாக தினகரன் ஆதரவாளரான கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஏ.பி.நாகராஜன் தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் சசிகலா மற்றும் தினகரனின் ஆதரவாளரான ஏ.பி.நாகராஜ் எம்.பி. கோவில்பாளயைத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்று வரும் வருமானவரித் துறையினரின் சோதனை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே நடைபெற்று வருகிறது. கடந்த 10 மாதங்களுக்கு முன் தமிழக அரசு தலைமைச் செயலர் மற்றும் சேகர் ரெட்டி, அன்புநாதன் ஆகியோரின் வீடுகளில் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டு பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றினர். ஆனால் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை.
மேலும், மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பிளவை ஏற்படுத்தி, சில சுயநல சக்திகள் அதிமுகவை அழிக்க நினைக்கின்றன.
ஆனால் இதுபோன்ற எந்தவிதமான மிரட்டல்களுக்கும் உண்மையான அதிமுகவினர் அஞ்சமாட்டோம். மேலும் அதிமுகவை அழித்து விட்டு தமிழகத்தில் யாரும் காலூன்ற முடியாது என்றார்.