ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் செயல்பாடு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று மதிமுக மாநில இளைஞரணிச் செயலர் வே.ஈஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, அவர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கடித விவரம்:
மாநில அரசின் செயல்பாடுகளில் தங்களுக்கு திருப்தி இல்லாவிட்டாலோ, அரசு சட்டத்துக்குப் புறம்பாக செயல்படுவதாக நினைத்தாலோ மாநில முதல்வரிடமோ, தலைமைச் செயலரிடமோ தாங்கள் அறிக்கை கேட்டிருக்கலாம்.
ஆனால், அதற்கு மாறாக அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்திய தங்களின் செயல்பாடு, வாக்களித்த மக்களின் உரிமையைப் பறிப்பதாக உள்ளது.
மேலும், இது நாட்டின் ஒற்றுமையையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் தகர்ப்பதாக, அவற்றுக்கு எதிரானதாகவும் உள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆட்சியில் இருக்கும்போது, மாநில அரசின் நிர்வாகத்தில் ஆளுநர் நேரடியாகத் தலையிடுவது தமிழகத்தில் இதுவரை இல்லாத ஒன்று. எனவே, தாங்கள் இனியும் இந்தப் போக்கைத் தொடர வேண்டாம்.
மாறாக, கோவை மாவட்டத்துக்கு மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய உலகத் தர பல்கலைக்கழகம், புல்லட் ரயில் திட்டம், புதிய பொதுத் துறை நிறுவனங்களைத் தொடங்குவது, மத்திய அரசு அச்சகத்தை வெளியேற்றுவதைத் தடுத்து, தொடர்ந்து செயல்பட உத்தரவிடுவது போன்றவற்றில் கவனம் செலுத்தலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.