மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் 129-ஆவது பிறந்த நாளான குழந்தைகள் தினத்தையொட்டி காங்கிரஸ் கட்சியினர் செவ்வாய்க்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாநகர் மாவட்டத் தலைவர் மயூரா ஜெயகுமார் தலைமையில் காங்கிரஸ் நேருவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு கல்வித் தொகையும், கராத்தே போட்டியில் பதக்கங்கள் வென்ற மாணவனுக்கு ஊக்கத் தொகையையும் மாநகர் மாவட்டத் தலைவர் மயூரா ஜெயகுமார் வழங்கினார்.
இதில் கட்சி நிர்வாகிகள் கே.பி.எஸ்.மணி, கோவை செல்வன், திருமூர்த்தி, சௌந்தரகுமார், குருசாமி, வழக்குரைஞர் கருப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
துணி வணிகர் சங்கப் பள்ளி:
கோவை ராஜ வீதியில் உள்ள துணி வணிகர் சங்கப் பள்ளியில் பலூன்கள் பறக்கவிட்டும், கேக் வெட்டியும் நேரு பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து குழந்தைகளின் படைப்புக் கண்காட்சியை தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர் ஏ.அருள் தொடக்கிவைத்தார்.
இதில், தேசியக் குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குநர் டி.வி.விஜயகுமார், துணி வணிகர் சங்க மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பி.சந்திரசேகரன், அனைவருக்கும் கல்வி இயக்க உதவித் திட்ட அலுவலர் சி.பெல்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.