பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் மீதான வழக்கில் விசாரணைக்குப் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக செவ்வாய்க்கிழமை கோவை வந்த அவர், பட்டமளிப்பு விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாரதியார் பல்கலைக்கழகத்தின் 34-ஆவது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று 550 மாணவ, மாணவிகளுக்கு முனைவர் பட்டங்களை வழங்கியுள்ளார். 84, 408 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றுள்ளனர். நாட்டில் 799 பல்கலைக்கழகங்களும், தமிழகத்தில் 58 பல்கலைக்கழகங்களும் உள்ளன.
இந்நிலையில் நாடு முழுவதிலும் உள்ள சிறந்த 100 பல்கலைக்கழகங்களின் பட்டியலை மனிதவள மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ளது. அதில் கலை, அறிவியல் பல்கலைக்கழகங்களில் 28-ஆவது இடத்தை பாரதியார் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது. மேலும், தமிழகத்தில் உயர் கல்வித் துறையின் கீழ் உள்ள 13 பல்கலைக்கழகங்களில் 8 பல்கலைக்கழகங்கள் அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அந்த அளவுக்கு தமிழக உயர்கல்வித் துறை மேம்பட்ட நிலையில் உள்ளது.
தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாகக் கூறுவதில் உண்மையில்லை. மலைவாழ் மக்களுக்கு கல்வி வழங்குவதில் தமிழகம் தேசிய சராசரியை விட முன்னணியில் உள்ளது. மலைவாழ் மக்களில் படிக்க விரும்புவோருக்கு அவர்கள் இருக்கும் இடத்திலேயே வாய்ப்பு உருவாக்கிக் கொடுக்கப்பட்டு வருகிறது. பாரதியார் பல்கலைக்கழகம் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. அதன் துணை வேந்தர் மீதான புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை அறிக்கை வந்த பின்னர் அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.