சின்னத்தாடகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் அமைப்பதற்கான உதவி உபகரணங்களை மகளிர் சுழல் சங்கத்தினர் இலவசமாக வழங்கினர்.
செங்கல்சூளைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் அதிமாகப் பயிலும் இப் பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் அமைப்பதற்காக கல்வி உபகரணங்களை வழங்க தலைமை ஆசிரியை ஷீலா கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து, கோவை மகளிர் சுழற்சங்கம்-85 இவற்றை வழங்க முன்வந்தது. இதற்கென நடந்த விழாவுக்கு சின்னத்தடாகம் ஊராட்சி முன்னாள் தலைவர் டி.என்.வேலுச்சாமி தலைமை வகித்தார். பெற்றோர் சங்க நிர்வாகி எம்.என்.ரங்கசாமி, கிழக்கு வாசல் அமைப்பின் நிர்வாகி கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மகளிர் சுழற்சங்கத்தின் தலைவி ரஞ்சிதா கல்வி உபகரணங்களை தலைமை ஆசிரியை ஷீலாவிடம் வழங்கினார். இதில் சங்க நிர்வாகிகள் சலாகா, ஆசிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.