காரமடையை அடுத்த பில்லூர் அணைப் பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து சிறப்பு அதிரடிப் படையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
தமிழக-கேரள எல்லைப் பகுதியான பில்லூர் அணைப் பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுவதால், இங்கு சிறப்பு அதிரடிப் படையினர், நக்ஸ்ல் தடுப்புப் பிரிவினர் உள்ளிட்டோர் நிரந்திர முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பில்லூர் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ளதாக வந்த தகவலையடுத்து அப்பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினர், நக்ஸ்ல் தடுப்புப் பிரிவினர் வியாழக்கிழமை தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில், சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோரும், நக்ஸல் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த 20 பேர் என 35-க்கும் மேற்பட்டோர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இவர்கள் பில்லூர், அதைச் சுற்றியுள்ள சுண்டப்பட்டி, கூடப்பட்டி, வேப்பமரத்தூர், முள்ளி, வீரக்கல், கோரப்பதி உள்ளிட்ட ஆதிவாசி கிராமங்களில் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து விசாரனை மேற்கொண்டனர்.
குன்னூரில்... கேரள மாநிலம், அகழியில் காளிதாஸ் என்ற மாவோயிஸ்ட் கடந்த சில நாள்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து , நீலகிரி மாவட்டத்தில் உள்ள கேரள எல்லையான வீரான் கொம்பை, மல்லன் தோட்டம், பெரும்பள்ளம், முள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நக்ஸல் தடுப்புக் காவல் படையைச் சேர்ந்த வீரர்கள் வியாழக்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.