6-ஆம் வகுப்பின் இரண்டாம் பருவ பாட நூல்களில் குளறுபடி

கோவையில், 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இரண்டாம் பருவ பாட நூல்களில் பக்கங்கள் இல்லாமலும், தலைகீழாக அச்சிடப்பட்டும் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவையில், 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இரண்டாம் பருவ பாட நூல்களில் பக்கங்கள் இல்லாமலும், தலைகீழாக அச்சிடப்பட்டும் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் முப்பருவக் கல்வி முறை அமலில் உள்ளது. அதன்படி ஒன்றாம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு வரை,  பின்னர் அரையாண்டு தேர்வு வரை,  அதன் பிறகு இறுதித் தேர்வு வரை என மூன்று கட்டங்களாக பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், காலாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை (அக். 3) பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து, கோவை மாவட்டம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு இரண்டாம் பருவத்துக்கான பாடநூல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, கோவை மாவட்டத்தில் மாநகரம், சூலூர், கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் 6-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட தொகுதி 1 பாட நூலில் (தமிழ் - ஆங்கிலம்) பல குளறுபடிகள் இருப்பதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பாடநூலில் 16-ஆம் பக்கத்துக்கு அடுத்து 33-ஆம் பக்கமும்,  சில புத்தகங்களில்  48-ஆம் பக்கத்துக்கு அடுத்ததாக 65-ஆம் பக்கம் இருப்பதாகவும்,  ஒரு மாணவருக்கு 64-ஆவது பக்கத்தில் இருக்கும் பாடம், மற்றொருவருக்கு 65-ஆவது பக்கத்தில் இருப்பதாகவும், விடுபட்ட பக்கங்கள் பாடநூலில் இல்லை என்றும் தெரிவிக்கின்றனர்.
அதேபோல், தற்போது வழங்கப்படும் சாக்பீஸ்கள் மிகவும் தரம் குறைந்து இருப்பதாகவும், அதைக் கொண்டு ஒரு வரியைக் கூட எழுத முடியாமல் ஆசிரியர்கள் சிரமப்படுவதாகவும் தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச் சங்கத் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அரசுக்கு புகார் அனுப்ப இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com