கோவை அருகே சுப்பிரமணியம்பாளையத்தில் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருந்த அம்மன் கோயிலை இடிக்க வந்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இப்பகுதி பொதுமக்கள் அங்குள்ள புறம்போக்கு நிலத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆதிபராசக்தி கோயிலைக் கட்டி வழிபட்டு வந்தனர். இந்நிலையில், சாலையோரம் அமைந்துள்ள இக்கோயிலால் போக்குவரத்துக்கு பாதிப்பு உள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த மருதாசலம் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இதில் அக்கோயிலை அப்புறப்படுத்த வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதன்பேரில் கோவை வடக்கு வட்டாட்சியர் சிவகுமார், பெரியநாயக்கன்பாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சீனிவாசலு, துடியலூர் காவல் ஆய்வாளர் வெற்றிவேந்தன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு பொக்லைன் இயந்திரங்களுடன் புதன்கிழமை வந்து கோயிலை இடிக்க முயன்றனர். அப்போது அங்கு கூடிய பெண்கள் கோயிலை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் சாமியாடி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இருப்பினும் போலீஸார் கோயிலை இடித்து அப்புறப்படுத்தினர். இதனால் இப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.