எம்ஜிஆர் மன்றத்தை சேதப்படுத்தியதாக அதிமுகவினர் தொடர்ந்த வழக்கில் சிங்காநல்லூர் சட்டப் பேரவை உறுப்பினர் நா.கார்த்திக் உள்ளிட்ட 6 பேர் கோவை நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராகினர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு குறித்து திமுக தலைவர் மு.கருணாநிதி எழுதிய நூலை திமுக சட்டப் பேரவை உறுப்பினர் நா.கார்த்திக் உள்ளிட்டோர் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வீடுவீடாக 2014-இல் விநியோகம் செய்தனர். இதற்கு,அப்பகுதி அதிமுகவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, தண்டபாணி வீதியில் உள்ள எம்ஜிஆர் மன்றத்தை திமுகவினர் சேதப்படுத்தியதாக அதிமுக நிர்வாகிகள் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக எம்எல்ஏ நா.கார்த்திக், முன்னாள் மாவட்ட நிர்வாகி மணிகண்டன், பழையூர் சோமு, புதூர் ரவிச்சந்திரன், ஆனந்தன், ராஜா, பத்மநாபன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கோவை நீதித் துறை நடுவர் நீதிமன்றம் எண் 3-இல் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்காக கார்த்திக் உள்பட 6 பேர் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராகினர். அப்போது, இந்த வழக்கின் மீதான அடுத்த கட்ட விசாரணையை அக்டோபர் 28-ஆம் தேதி நீதிபதி ஒத்திவைத்தார்.