தமிழகத்தின் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் வகையில் கிராமிய பண்டிகை நிகழ்ச்சி பொள்ளாச்சியை அடுத்த சமத்தூரில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு டிராவல் மார்ட் அமைப்பு, சமத்தூர் ஜமீன், ஊத்துக்குளி ஜமீன், சுற்றுலாத் துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன.
நிகழ்ச்சியில் தமிழகத்தின் பாரம்பரிய கலைகளான தேவராட்டம், ரேக்ளா, சக்திக் கும்பம் எடுத்தல், கத்திபோடுதல், தேங்காய் போடுதல், உறித்தல், செங்கல் அறுப்பு, சிக்காட்டம், குறவஞ்சி, வர்மக்கலை, நெல்குத்துதல், சலித்தல், உரல், அம்மியில் ராகி நெறித்தல், மோர்சிலுப்புதல், குண்டு விளையாட்டு, கில்லி, கபடி, பல்லாக்குழி, தோப்புக்கரணம், பம்பரம் விடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்ந்து ஏற்றம் நீர் இறைத்தல், கோழிச்சண்டை, முளைப்பாரி கோலம், யாகம், திருமணம், பூவோடு எடுத்தல், கிளிஜோசியம், பட்டிப்பொங்கல், அலகு குத்துதல், கொலு வைத்தல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் பாரம்பரிய நடைமுறைகள் நிகழ்ச்சிகள் குறித்து நிகழ்ச்சிகளாக செய்து காண்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு, கனடா, தென்ஆப்பிரிக்கா, லண்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர்.
இந்தியாவில், பல்வேறு மாநிலங்களில் அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கி வரும் 25-ஆம் தேதி வரை இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. தமிழகத்தில் இந்த நிகழ்ச்சி சென்னையிலும், பொள்ளாச்சியிலும் மட்டுமே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.