பெண் காவல் உதவி ஆய்வாளரை மிரட்டியதாக தனியார் நிறுவன பெண் ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.
கோவையை அடுத்த மதுக்கரையில் நிறுவனம் நடத்தி வருபவர் விகாஸ். இவரது நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றி வருபவர் ஷியாமா (28). விகாஸ், அவரது நண்பர் ரமேஷ் ஆகியோருக்கு இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்து வந்துள்ளது.
இதுதொடர்பாக இரு தரப்பினரும் அளித்த புகாரின்பேரில் புலியகுளம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இருவரையும் வைத்து போலீஸார் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது, அதை ஷியாமா அவரது செல்லிடப்பேசியில் பதிவு செய்துள்ளார். இதைப் பார்த்த பெண் உதவி ஆய்வாளர் பிரபாவதி அவரை எச்சரித்துள்ளார்.
அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் உதவி ஆய்வாளர் பிரபாவதியை மிரட்டியும்,
அவதூறாகவும் ஷியாமா பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உதவி ஆய்வாளர் பிரபாவதி அளித்த புகாரின்பேரில் ஷியாமாவை போலீஸார் கைது செய்தனர்.