கோவையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
கோவை மாநகரின் சில இடங்களில் டெங்கு, வைரஸ் காய்ச்சல் 3 முதல் 7 நாள்களுக்குள் குணப்படுத்தப்படும் என்றும், புற்றுநோய், நுரையீரல், கல்லீரல் நோய், சிறுநீரகச் செயலிழப்பு, இதயக் குழாய் அடைப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் 10 முதல் 30 நாள்களுக்குள் குணமடையும் வகையில் நானோ தொழில்நுட்பத்தில் உடலியல் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது.
இதுகுறித்து தகவலறிந்த மருத்துவம், ஊரக நலப் பணிகள் துறை இணை இயக்குநர் டாக்டர் சந்திரசேகர் கோவை ராமநாதபுரம், பங்கஜா மில் சாலையில் உள்ள அந்த கிளினிக்கில் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டார்.
அப்போது, புலியகுளம் பகுதியைச் சேர்ந்த ராபர்ட் சாக்கோ (54) என்பவர் மூலிகைப் பொடிகள் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். விசாரணையில் அவர் பி.காம் முடித்து விட்டு அக்குபிரஷர் சிகிச்சைக்கான சான்று மட்டும் பெற்றுக் கொண்டு நோயாளிகளுக்கு ஆயுர்வேத முறையில் சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை மருத்துவம், ஊரக நலப் பணிகள் துறை இணை இயக்குநர் டாக்டர் சந்திரசேகர் புலியகுளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கிளினிக்கில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மூலிகைப் பொடிகளின் மாதிரிகள் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டன.