பொள்ளாச்சி பகுதியில் வெள்ளை ஈ தாக்குதல் ஏற்பட்ட தென்னை மரங்களை வேளாண் இயக்குநர் ஆய்வு செய்தார்.
கோவை மாவட்டத்தில், பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதல் அதிக அளவில் உள்ளது. வெள்ளை ஈ தாக்குதலால் ஆயிரம் ஹெக்டேருக்கும் மேல் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டு காய்ப்புத் திறனை இழந்துவிட்டன. இதனால் விவசாயிகள் பலத்த நஷ்டத்தை சந்தித்துவருகின்றனர்.
இந்நிலையில், வெள்ளை ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் சார்பில் சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து பொள்ளாச்சி ஜெயராமன், முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, தமிழக வேளாண் துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி பொள்ளாச்சி பகுதியில் உள்ள தோட்டங்களில் வெள்ளை ஈ தாக்குதல் ஏற்பட்ட தென்னை மரங்களை வியாழக்கிழமை பார்வையிட்டார்.
இதைத் தொடர்ந்து அவர் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் 950 ஹெக்டேர் பரப்பில் உள்ள தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதல் உள்ளது. இதைக் கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த செயற்கை பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தக்கூடாது. ஒட்டுண்ணி, இரைக்கொல்லி, இயற்கை முறை கரைசல் போன்றவற்றை தெளிக்கவேண்டும். மேலும், விளக்குப்பொறி வைத்தல் போன்ற முறைகள் பூச்சித் தாக்குதல் பற்றி தெரிந்துகொள்ளமுடியும் என்றார்.
இதைத் தொடர்ந்து, விவசாயிகள், அதிகாரிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் முறை குறித்து விளக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கோவை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.ஏ.சக்திவேல், வேளாண்துணை இயக்குநர் ராசு, ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ராஜமாணிக்கம், விவசாயிகள் முருகேசன், தனசேகர், பத்மநாபன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.