பொள்ளாச்சியில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் ஆம்னி பேருந்து ஓட்டுநர் கொலை செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி, மகாலிங்கபுரம், சரோஜினி வீதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (51). தனியார் ஆம்னி பேருந்து ஓட்டுநர். தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம், கீழ இரால், இந்திரா நகரைச்சேர்ந்தவர் குரு (45). கடிகார வியாபாரி. இருவரும் பொள்ளாச்சி, காந்தி மண்டபம் வீதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கிவந்துள்ளனர். இதில், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவருக்குள்ளும் பணம் கொடுக்கல் வாங்கலும் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், விடுதியில் இருந்தபோது மது போதையில் இருவருக்கும் புதன்கிழமை இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆறுமுகத்தை குரு கத்தியால் குத்தியுள்ளார். பலத்த காயமடைந்த ஆறுமுகம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து குருவைக் கைது செய்தனர்.