கோவையில் காவல் உதவி ஆய்வாளர் விஷம் குடித்து வியாழக்கிழமை தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
கோவை, குனியமுத்தூரை அடுத்த கோவைப்புதூரில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையின் 4-ஆவது பட்டாலியன் உள்ளது. இந்தப் பயிற்சி மையத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருபவர் உதவி ஆய்வாளர் ஸ்ரீகாந்த் (47).
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வேலூருக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டு அங்கு பணியாற்றி வருகிறார். தீபாவளி விடுமுறைக்காக இரு நாள்களுக்கு முன்னர் கோவை வந்தார்.
இதனிடையே, ஸ்ரீகாந்த் விஷம் அருந்தி வீட்டில் வியாழக்கிழமை காலையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
குடும்பத்தினர் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து குனியமுத்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.