சூலூர் அருகே உள்ள கிட்டாம்பாளையத்தில் வியாழக்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் கணவர் உயிரிழந்தார். மனைவி, மகன் இருவரும் பலத்த காயமடைந்தனர்.
கருமத்தம்பட்டியை அடுத்த வலையபாளையத்தில் உள்ள தறிக் கிடங்கில் வேலை பார்த்து வந்தவர் திருநெல்வேலியைச் சேர்ந்த தங்கவேல் மகன் முத்துராஜ் (50). இவரது மனைவி பூபதி (39). மகன் பிரிதிவிராஜ் (22). இவர்களும் அதே தறிக் கிடங்கில் பணியாற்றி வருகின்றனர்.
கிட்டாம்பாளையம் நால் ரோடு அருகே, தனது இருசக்கர வாகனத்தில் முத்துராஜ் தனது மனைவி, மகனுடன் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது, அவருக்குப் பின்னால் வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த முத்துராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி பூபதி, மகன் பிரிதிவிராஜ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விசாரணையில், இருசக்கர வாகனத்தின்மீது மோதிய கார் அதே ஊரைச் சேர்ந்த ரங்கசாமி (34) என்பவருக்குச் சொந்தமானது என தெரியவந்துள்ளது. ரங்கசாமி காரை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.
இதுகுறித்து, கருமத்தம்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.