கோவை மாநகரில் வீடு, வர்த்தக நிறுவனங்களில் டெங்கு கொசுவைத் தடுப்பதில் அலட்சியமாகச் செயல்பட்ட நபர்களுக்கு ரூ. 1.22 லட்சம் அபராதம் திங்கள்கிழமை விதிக்கப்பட்டது.
கோவை மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கோவை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் டெங்கு கொசுக்கள் உற்பத்திக்கு காரணமான இடங்களைக் கண்டறிந்து அவற்றின் உரிமையாளர்களுக்கு சுகாதாரத் துறையினர் நோட்டீஸ் மற்றும் அபராதம் விதித்து வருகின்றனர்.
இதில், கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட நான்கு மண்டலங்களில் திங்கள்கிழமை மேற்கொண்ட ஆய்வில் டெங்கு கொசுவைத் தடுப்பதில் அலட்சியமாகச் செயல்பட்ட நபர்களுக்கு ரூ. 1.22 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
கோவை புறநகர் பகுதிகளான பொள்ளாச்சி, ஆனைமலை, மேட்டுப்பாளையம் பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு நோட்டீஸ் விநியோகித்து லட்சக்கணக்கில் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாவும் சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.