பெரியநாயக்கன்பாளையத்தில் தனியார் மருத்துவமனை செவிலியர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து கோவை அரசுப் பொது மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியநாயக்கன்பாளையம், ஜோதிபுரம் தபால் நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் அருள். இவரது மகள் கிரேஸி(25). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தலைமை செவிலியராகப் பணிபுரிந்து வந்தார். இம்மருத்துவமனையில் நடைபெற்று செவிலியர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு பயிற்றுநராகவும் கிரேஸி பணியாற்றி வந்தார்.இந்நிலையில், பணிசுமை காரணமாகவும், மாற்றுச் செவிலியர்கள் முறையாகப் பணிக்கு வராததாலும் பயிற்சி வகுப்புகளை நடத்த அவரால் முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனை இயக்குநர் அவரைக் கண்டித்தாராம்.
இதனால் வேதனையடைந்து கிரேஸி வியாழக்கிழமை மதியம் வீட்டுக்குச் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்த, போலீஸார் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை திரண்ட அவரது உறவினர்கள் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறி சடலத்தை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.